search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த தினம்"

    • விவசாய அமைப்புகள் மரியாதை
    • திருவட்டார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சி காலத்தில் 1895 ஆண்டு தொடங்கி 1906-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டுவதில் ஆங்கிலேய பொறியாளரான ஹம்பிரே அலெக்ஸாண்டர் மிஞ்சின் முக்கிய பங்காற்றினார். இவரது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது. அடர்ந்த காட்டு பகுதியில் இவரது அயராது உழைப்பு மன்னரை வியக்க வைத்தது. பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர் இங்கிலாந்தில் 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ல் பிறந்தார்.

    1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ல் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது மறைவு மன்னரை அதிர்ச்சியடைய செய்தது. இவர் மீது கொண்ட நன்மதிப்பால் மன்னர் பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் உடலை நாகர்கோவிலிருந்து ஊர்வலமாக எடுத்து வர செய்து பேச்சிப்பாறை அணை பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார். அவரது தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் 8, நினைவு நாளான செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் திரண்டு பேச்சிப்பாறை அணையிலுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதேபோன்று 154-வது பிறந்த தினமான நேற்று விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக சென்று மலரஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர். விவசாயிகள் அமைப்புகள் சார்பில் பாசனதுறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவர் புலவர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், மாவட்ட உற்பத்தி குழு உறுப்பினர் ஹென்றி, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், துணை தலைவர் பீனாகுமாரி திருவட்டார் ஒன்றிய தி.மு.க. தொண்டரணி முன்னாள் அமைப்பாளர் ஜெறோம், விவசாய சங்க பிரதிநிதிகள் முருகேசபிள்ளை, செண்பகசேகரபிள்ளை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×